கன்னியாகுமரி, செப். 9 –
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் வரிசையில் நிற்காமல் நேரடி தரிசனம் செய்வதற்காக பக்தர்களிடம் ஊழியர்கள் யுபிஐ பண பரிவர்த்தனை மூலமும், நேரடியாகவும் பணம் பெற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இந்நிலையில் கோயில் ஊழியர் ஒருவர் பக்தர்களிடம் அதிகாலையிலேயே பணம் வசூல் செய்யும் இரு வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. செய்திகளும் வெளியானது.
இதன் எதிரொலியாக நடைபெற்ற விசாரணையில் கோயிலுக்குள் பண வசூலில் ஈடுபட்டவர் இந்து அறநிலையத்துறையின் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் சிறப்பு காவலர் நிலையில் பணியாற்றி வரும் ஊழியர் செந்தில்குமார் என்பதும், இவர் தற்போது துறையின் வாகன ஓட்டுனராகவும் இருந்து வருவது தெரியவந்தது. இந்நிலையில் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து இந்து அறநிலையத்துறையின் குமரி மாவட்ட இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ஜான்சி ராணி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு காவலர் செந்தில்குமார், தற்போது மாற்றுப்பணியில் ஊர்தி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது பணிக்கு எவ்வித தொடர்பும் இல்லாத கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அதிகாலை வேளைகளில் வந்து பக்தர்களிடம் சிறப்பு தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக கூறி முறைகேடாக பணவசூலில் ஈடுபட்டு வருவது சமூக ஊடகங்கள், மற்றும் வீடியோ பதிவுகள் மூலம் தெளிவாக தெரிய வருகிறது. இவர் அரசுக்கும், அறநிலையத்துறைக்கும், திருக்கோயில் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வந்துள்ளார். எனவே நிர்வாக நலனை கருத்தில் கொண்டு செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல காலமாக கன்னியாகுமரி கோயிலுக்குள் பக்தர்களிடம் தொடர்ந்து நடந்து வந்த வசூல் வேட்டை நிர்வாக அதிகாரிகளின் ஆதரவுடனே நடந்து வந்ததாகவும், இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், மேல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



