தக்கலை, ஏப். 10 –
அருமனை அருகே உள்ள களியல் பகுதி சிற்றாற்றின் கரையை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ். ராணுவ வீரர். இவரது மகள் காட்லின் அபினா (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சமீபத்தில் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த அபினாவை நேற்று இரவு மீண்டும் திருச்சிக்கு ரயிலில் அனுப்பி வைப்பதற்காக தந்தை கிறிஸ்துராஜ் பைக்கில் மகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
தக்கலை மெயின் ரோட்டில் செல்லும் போது பின்னால் வந்த டாரஸ் லாரி ஒன்று பைக் மீது மோதியது. இதில் பைக்கில் பின்னால் இருந்த காட்லின் அபினா தடுமாறி டாரஸ் லாரி அடியில் விழுந்தார். அவர் மீது டாரஸ் லாறி ஏறியதி தில் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விபத்தை பார்த்த பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர் டாரஸ் லாரி டிரைவர் தப்ப முயன்றார். அவர் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதற்கு இடையே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீலன் தலைமையில் பொதுமக்கள் டாரஸ் லாரிகளை தடைசெய்ய கோரி மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்தவுடன் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எஸ்பி யின் சமரசத்தை ஏற்றுக்கொண்ட நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் (30) என்பவரை கைது செய்தனர்.



