சேலம், ஜூன் 19 –
தமிழக அரசால் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பதுடன் விவசாயிகளின் குறைகளை அனைத்து துறை அலுவலர்கள் அறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடியை பொருத்தவரை நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் 27,513 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரங்கள், பூச்சி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. குறுகிய கால கடன் மற்றும் மத்திய கால முதலீட்டு வேளாண்மை கடன்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது.
இது குறித்தும் கால்நடை பராமரிப்பு துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மல்பரி சாகுபடி மற்றும் பட்டுக்கூடு அறுவடை குறித்தும் மாதாந்திர முன்னேற்றங்கள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைவாக அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை ஒட்டி இன்று மாவட்ட ஆட்சியரக தரைதளத்தில் நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள், மரபுசார் விதைகள் இவை வேளாண் உற்பத்தியாளர்கள் நிறுவனம் சார்பில் உற்பத்தி பொருட்கள் குறித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்தார்.



