கடலாடி, ஜூன் 16 –
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பவித்ரா, சென்னை ஐஐடியில் (IIT Madras) இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மாணவி பவித்ராவை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், மலர்க்கொத்து வழங்கி அவரது உயர்கல்விப் பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அவர்கள், கிராமப்புற மாணவர்களும் தங்களது விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையால் நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் இடம் பெற்று சாதிக்க முடியும் என்பதற்கு மாணவி பவித்ரா சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார் என்று பாராட்டினார்.
மேலும், சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவரான மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அவர்கள், தாம் பயின்ற கல்வி நிறுவனத்திலேயே தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இடம் பெற்றிருப்பது பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்தார். மாணவி பவித்ரா தனது எதிர்கால கல்விப் பயணத்திலும் பல்வேறு சாதனைகளைப் படைத்து மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாக அலுவலர்கள், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மாணவியை வாழ்த்தினர்.



