திருச்சி, ஜூன் 9 –
தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும் என தமிழக முதல்வருக்கு விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த விபரம் வருமாறு: தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருவெறும்பூர் விவசாய கூட்டமைப்பின் சார்பில் 20க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்துள்ளார் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் நடராஜன் தெரிவிக்கையில்: தமிழ்நாடு அரசு தேர்தல் காலத்தில் அறிவித்தபடி 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், 5 ஏக்கருக்கு மேல் 50% வீதம் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்திட நடவடிக்கை எடுத்து, இந்த ஆண்டு விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும், ஒன்றிய அரசு தொடர்ந்து விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களின் விலையை ஏற்றிவருவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, ஒன்றிய அரசு உரத்தின் விலையை குறைக்க வேண்டும், உய்யகொண்டான், கட்டளை வாய்க்கால்களை தூர்வாரிட நடவடிக்கை எடுத்திட வேண்டும், திருவெறும்பூர் வட்டத்தில் 2024-25ல் பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பயிர் இன்சூரன்ஸ் வழங்காமல் உள்ளது. உடனடியாக பயிர் இன்சூரன்சை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தெரிவித்தார்.



