நாகர்கோவில், மார்ச் 30 –
குமரி மாவட்டம் கடலோர மாவட்டம் என்பதால் மீனவர்கள் அதிகம் வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடித்தொழிலேயே தங்களுடைய வாழ்வாதாரமாக கொண்டு, தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று, மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 வருடத்திற்கு ஒரு நாள் வரும் தேர்தல் திருவிழாவில் மேற்குறிப்பிட்ட இடங்களில் மீன் பிடித்து வரும் மீனவர்களும், அனைத்து மீனவ வாக்காளர்களும் கண்டிப்பாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்று கொண்டிருந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்களிடம் வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மேலும் தேர்தல் ஆணையத்தின் இலக்கான 100% வாக்குப்பதிவை எட்டும் நோக்கில், துறைமுகப் பகுதியில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், மீனவ மக்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



