சங்கரன்கோவில், ஜூன் 28 –
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. 100 க்கும் மேற்பட்டோர் உள் நோயாளியாகவும் அதிக அளவில் வெளி நோயாளிகளும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா மருத்துவமனையில் ஒன்பது கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார்.
பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்தான மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். சிகிச்சை பெற்று வரும் மனம் நலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவும் வகையில் அரசு முதியோர் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். ஆண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாசுதேவநல்லூர் மொழிப்போர் தியாகி சண்முகையாவை சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனை முழுவதும் சென்று நோயாளிகளுக்கான வசதிகள் அனைத்தும் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவது குறித்து கேட்டறிந்தார்.
மேலும் இரண்டாவது நுழைவு வாயில் அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கட்டிட பணி முடிந்தவுடன் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஏற்படுத்தி தரப்படும் என எம்.எல்.ஏ உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர துணை செயலாளர் முத்துக்குமார், மாரி, பாலாஜி மற்றும் பலர் உடனிருந்தனர்.



