சேலம், ஜூலை 31 –
தமிழக அரசின் சார்பில் சேலம் மாவட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் செட்டிச்சாவடி பகுதியில் திடக்கழிவு மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த மையத்தில் நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் மூலமாக வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக உயிரி இயற்கை எரிவாயு தயாரிக்கும் மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அஸ்தம்பட்டி மண்டலத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு உணவின் தரம், பணியாளர்கள் விவரம், தினசரி உணவிற்கு வருகை தரும் பொதுமக்கள் குறித்த விவரம், உணவு பட்டியல், உணவு விற்பனை விலை விவரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். உணவருந்த வருகை புரிந்த பொது மக்களிடம் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து கேட்டறிந்தார். அஸ்தம்பட்டி கோட்டம் சேலம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த மையத்தில் நாள்தோறும் பயன்பெறும் பணியாளர் எண்ணிக்கை மற்றும் என்ன வகையான உணவு வழங்கப்பட்டு வருகிறது என்ற விவரங்களையும், உணவின் சுவை குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் வெங்கடப்பன் சாலை அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பயிலும் குழந்தைகள் எண்ணிக்கை குறித்தும், குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, குழந்தைகளின் எடை, உயரம் சரியாக உள்ளதா என்பது குறித்தும் அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்து குழந்தைகளுடன் கலந்துரையாடினார். இதை தொடர்ந்து குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை பார்வையிட்டு படுக்கை வசதி, புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவு, பிரசவத்திற்கு பின் கவனிக்கும் முறை, மருந்தகம், ஆய்வகம் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் மரவனேரி பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருவது குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் அம்மாபேட்டை மண்டல அணைமேடு பகுதியில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், மன்னார் பாளையம் பிரிவில் வர்மா கார்டன் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு வரும் பணிகளையும், வர்மா கார்டன் பகுதியில் செயல்பட்டு வரும் அறிவியல் பூங்காவின் செயல்பாடு குறித்தும், வாய்க்கால் பட்டறை பகுதியில் செயல்பட்டு வரும் தெரு நாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கலந்தாய்வு மேற்கொண்டார்.



