சிவகங்கை, ஜன. 27 –
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள இலுப்பக்குடி தமறாக்கி கிளாதரி அரசனூர் குமாரப்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் 1565 ஏக்கர் பரப்பளவில் கிராபைட் என்னும் கனிமம் இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிராபைட்டை வெட்டி எடுப்பதற்கு தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பகுதியில் உள்ள 10 -க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் ஒன்று சேர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு முன்பு அவர்கள் சிவகங்கை நகர் முழுவதும் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து ஊர்வலமாகவும் வந்தனர். இந்த போராட்டத்தின் போது விவசாய அமைப்புகளின் தலைவர்கள் பேசும்போது குறிப்பிட்டதாவது: இந்த கிராமப் பகுதிகளில் கிராபைட் சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்தப் பகுதிகளில் 10 ஆயிரம் விவசாயிகள் விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம். இந்த பகுதிகளில் ஏற்கனவே மேய்ச்சல் நிலங்களும் குறைந்து வருகிறது. இந்நிலையில் எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் இந்தப் பகுதிகளில் செயல்படுத்த விடமாட்டோம்.
நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எனவே அரசு இந்த விஷயத்தில் எங்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றனர். இந்த போராட்டத்தில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன், அகில இந்திய விவசாய துணைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் ரவீந்திரன், சிவகங்கை மாவட்ட விவசாய சங்க செயலாளர் வீரபாண்டி தமறாக்கி கருணாகரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
போராட்டத்தின் முடிவில் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனுக் கொடுத்துவிட்டு கூறியதாவது: எங்கள் கோரிக்கையை ஏற்று சுரங்கம் தோண்ட கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.



