குளச்சல், செப். 23 –
கன்னியாகுமரி அருகே சின்ன முட்டத்தை சேர்ந்தவர் ஆலன் ஜோஸ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன் தினம் காலையில் செட்டிகுளத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் சிவமுருகன் (35) உட்பட 17 மீன் பிடி தொழிலாளர்கள் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். மாலை 7 மணி அளவில் படகில் இருந்த சிவமுருகனை காணவில்லை. அவர் தவறி கடலுக்குள் விழுந்தது தெரிய வந்தது. இதை அடுத்து உடன் தொழிலாளர்கள் கடல் முழுவதும் தேடினர். எனினும் மாயமான சிவ முருகனை கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த தகவலும் கிடைக்காதால் குளச்சல் மரைன் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் மாயமானதாக கருதப்பட்ட சிவமுருகன் நேற்று காலை 4.30 மணி அளவில் மீன் பிடிக்க சென்ற வள்ளம் மீனவர்களால் மீட்கப்பட்டு கூந்தன்குழி கடற்கரையில் கரை சேர்க்கப்பட்டார். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பின் அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடல் விழுந்து மாயமாகி மீட்கப்பட்ட சிவமுருகனுக்கு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது அவரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். அவர் உயிருடன் மீட்கப்பட்டு வீட்டிற்கு வருகை தந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில்: சின்னமுட்டம் கடலில் தவறி விழுந்த சிவமுருகன் மீனவர்கள் விரித்திருந்த வலையில் மிதவையை கெட்டியாக பிடித்துக் கொண்டு அப்படியே கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார். ஒன்றரை நாட்களுக்கு பின் நேற்று அதிகாலையில் அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற வள்ளம் மீனவர்கள் அவரை பார்த்து மீட்டுள்ளதாக அவர் கூறினார்.



