நாகர்கோவில், ஜூலை 31 –
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட இடலாக்குடியில் மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலர் நினைவு மண்டபம் உள்ளது. இன்று அவரது 152வது பிறந்தநாளை முன்னிட்டு, நினைவு மண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில்: குமரி மாவட்டத்தில் பிறந்த சதாவதானி செய்குதம்பி பாவலர் புகழ் என்றும் மறவாமல் இந்திய மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் எழுதிய நூல்களை நாட்டுடைமை ஆக்கியதோடு, மத்திய அரசிற்கு பரிந்துரைத்து சதாவதானி செய்குதம்பி பாவலர் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. பாவலர் புகழ் என்றென்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ஆஸ்டின் எம்எல்ஏ, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், பாவலர் செய்குதம்பி மகன் வழி பேரன் கவிஞர் ஜமால் முகமது, கொள்ளு பேரன் ஷபிக் மீரான், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



