சென்னை, ஜூன் 20 –
சென்னை அண்ணா நகர் 4-வது அவென்யூவில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் புதிய கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் வைஷ்ணவி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் துணைச் செயலாளர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து விழா மேடையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களிடையே பேசியதாவது: அரசியல்வாதிகளுக்கு மக்கள் அதிகாரம் கொடுக்கிறார்கள். ஐஏஎஸ் மாணவர்களுக்கு கல்வியால் அதிகாரம் கிடைக்கிறது. கல்வியால் கிடைக்கக்கூடிய அதிகாரத்தால் மக்கள் சேவை செய்யக்கூடியவர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். நாட்டு மக்களுக்காக சேவையாற்ற வேறு எந்தத் துறையிலும் இது போன்ற வாய்ப்புகள்
கிடைக்காது. ஆகவே இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் நான் முதல்வன் திட்டம் மூலம் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவது தமிழ்நாட்டிற்கே பெருமை. இதேபோல் பல போட்டித் தேர்வில் மாணவர்கள் இன்று தேர்வு ஆகின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் நான் முதல்வன் திட்டம். அதிகாரம் கையில் வந்தால் அனைவருக்கும் நல்லது செய்யுங்கள், கல்வியால் உங்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது என்றால் அது கல்வித் துறை அமைச்சராக எனக்குப் பெருமை என்றார்.