கிருஷ்ணகிரி, மார்ச் 18 –
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே 2½ வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் போலீஸ் அலட்சியம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குற்றவாளியை உடனடியாக கைது செய்ய தவறிய இன்ஸ்பெக்டர் சுமித்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அஞ்செட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சுமித்ரா, ஆரம்பத்திலேயே மருத்துவ அறிக்கையில் பாலியல் பலாத்காரம் மற்றும் சந்தேக மரணம் குறித்த தெளிவான தகவல் கிடைத்தும், அதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாமதமே குற்றவாளிக்கு தப்பிக்க வாய்ப்பளித்ததாக சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கொளத்தூர் மணி மற்றும் சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அவர்கள் தெரிவிக்கையில்: ஒரு குழந்தையின் உயிரை காவு கொண்ட இந்த வழக்கில் அலட்சியம் காட்டிய அதிகாரி மீது வெறும் இடைநீக்கம் போதாது; உடனடியாக குற்றவியல் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சேசுராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியநாயகம் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். புதிய இன்ஸ்பெக்டர் கந்தவேல் பொறுப்பேற்ற பின்னரே வழக்கில் திருப்பம் ஏற்பட்டதாகவும், அதற்கு முன் நடந்த தாமதம் பல கேள்விகளை எழுப்புவதாகவும் கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இன்ஸ்பெக்டர் சுமித்ரா கடுமையான அலட்சியம் காட்டியதாக உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் சுமித்ரா மீது பாலியல், கொலை, வன்கொடுமை உள்ளிட்ட பிரிவின் வழக்கு பதியவில்லை. ஒரு குழந்தையின் உயிர் போன பின்னரும் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வரும் நிலையில், குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என சமூக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.



