கோவை, பிப். 10 –
திருப்பூர் வடக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் துணைத் தலைவர் ஜாபர் சாதிக் அவர்களை, காவல்துறையின் ஏடிஎஸ் பிரிவு ஒரு வழக்கில் அவரை பொய்யாக தொடர்புபடுத்தி கைது செய்திருப்பதை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் ஒரு நிகழ்வை தற்போது கையில் எடுத்து, அந்த வழக்கிற்கு எவ்வித தொடர்பும் இல்லாத ஜாபர் சாதிக் அவர்களைக் கைது செய்திருப்பது காவல்துறையின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையையே காட்டுகிறது.
ஜாபர் சாதிக் அவர்கள் வெறும் அரசியல் கட்சிப் பணியோடு நின்றுவிடாமல், திருப்பூரில் மிகச்சிறந்த சமூகச் சேவகராக வலம் வருபவர். மதம், இனம் கடந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகுந்த அன்புடன் பழகக்கூடியவர். பொதுமக்களுக்கு எந்தவொரு இடர் ஏற்பட்டாலும் உடனடியாக அங்கு சென்று களப்பணியாற்றும் நற்பண்பு கொண்டவரை, இந்த வழக்கில் தவறாகச் சேர்த்திருப்பது அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயலாகும். ஆகவே, தமிழக அரசு உடனடியாக அவரை விடுதலை செய்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மக்கள் பணியாற்றி வரும் ஒருவரை ஆதாரமின்றி கைது செய்திருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கினை எஸ்டிபிஐ கட்சி சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.



