குளச்சல், ஏப். 17 –
குளச்சல் பகுதியில் கடந்த சில நாட்களாக வயதான முதியவர் ஒருவர் மக்களிடம் யாசகம் கேட்டு வாழ்ந்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது இடது காலில் புண் ஏற்பட்டு நாளடைவில் புண் பெரிதானதால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதை பார்த்து சிலர் அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அவர்கள் பெயர் கேட்டபோது ஜோசப் (71) என்பதை மட்டும் கூறியுள்ளார். ஊர் பெயர் உறவினர்கள் பற்றி எதுவும் கூறவில்லை. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பின்னர் இது குறித்து குளச்சல் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிணவறையில் வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து இறந்தவருக்கு உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


