சென்னை, அக்டோபர் 07 –
சென்னையை சேர்ந்த 83 வயது மூதாட்டிக்கு மார்பைத் திறக்காமல் தொடை சிரை வழியாகவே இதய வால்வை மாற்றி சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனை ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்த மூதாட்டிக்கு பல இணைநோய்கள் இருந்தன. கடுமையான ‘மைட்ரல் ஆனுலர் கால்சிஃபிகேஷன்’ பாதிப்பால் அவரது இதய வால்வு செயலிழந்த நிலையில், மீண்டும் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார். ஏற்கனவே இருமுறை புற்றுநோய்க்காக கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்ததால், திறந்த இதய அறுவை சிகிச்சை என்பது அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும் என இந்தியாவின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறிவிட்டனர்.
கடுமையான கால்சியம் இதயத்தில் உள்ள மைட்ரல் (ஈரிதழ்) வால்வு, திறந்து மூடும் ஒரு கதவு போன்று இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. ஆனால், எம்.ஏ.சி பாதிப்பில், இந்தக் கதவின் சட்டம் பாறை போல இறுகி, சுண்ணாம்பு பூசி அடைத்தது போல் ஆகிவிடுகிறது. இதனால் மூச்சுத்திணறல், கடும் சோர்வு, இதய செயலிழப்பு என நோயாளிகள் உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இந்நிகழ்வில் காவேரி மருத்துவமனையின் டிரான்ஸ்கதீட்டர் இதய வால்வு சிகிச்சைகள் மையத்தின் இயக்குனர் டாக்டர் அனந்தராமன் கூறியதாவது: “உலகளவில் இந்த நோய் வகையினத்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதல் சிகிச்சை என்ற பெருமையை இது பெறுகிறது. உலகெங்கிலும் இதே போன்ற அதிக ஆபத்துள்ள எண்ணற்ற நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை இது வழங்கியுள்ளது” என்றார். மேலும் முதுநிலை இதயவியல் நிபுணர் டாக்டர். சி. சுந்தர், முதுநிலை இதய மார்பறை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். அருண்குமார் கிருஷ்ணசாமி மற்றும் ஒட்டுமொத்த பிற பணியாளர்களை உள்ளடக்கிய இதய சிகிச்சைக் குழு உறுப்பினர்களுக்கு இந்த வெற்றிகர சாதனைக்காக தனது நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.
இந்தச் சவால்களை எதிர்கொள்ள முதன்முறையாக ஒரு டிரான்ஸ்-கதீட்டர் உத்தியை நாங்கள் உருவாக்கினோம். ஒரு சிறப்பு வெளிப்புற உறை கொண்ட செயற்கை வால்வைத் தயாரித்த நாங்கள் அதை மிகத் துல்லியமாக, மார்பைத் திறக்காமல் தொடை சிரை வழியாகவே செலுத்தி பாறை போன்று இறுகிய அந்தப் பகுதியில் கசிவு ஏற்படாதவாறு பாதுகாப்பாகப் பொருத்தினோம். இதற்கு முன் இது போன்ற சிக்கலான சிகிச்சைகள் திறந்த இதய அறுவை சிகிச்சை மூலமே செய்யப்பட்டன. ஆனால் நாங்கள் ஒரு சிறு துளை வழியாகவே இந்த புதிய சாதனையை நிகழ்த்தினோம். இந்த புரட்சிகர சிகிச்சைக்கு பிறகு நோயாளி ஒரே வாரத்தில் நலமுடன் வீடு திரும்பினார்” என்று அவர் விளக்கமளித்தார்.



