மார்த்தாண்டம், ஜூன் 29 –
மேல்புறம் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் களியல் சந்திப்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. குமரி மாவட்ட வன பகுதிகளான ஆறுகாணி, பத்து காணி வட்டப்பாறை, பேணு, ஒரு நூறாம் வயல், மோதிர மலை, கோதையாறு, கோலிஞ்சி மடம் ஆகிய மலையோர பகுதிகளில் வசிக்கிற மலைவாழ் மக்களை வன விலங்குகள் தாக்குவது, காட்டுயானை அட்டகாசம் போன்றவை தொடர் நடவடியாக வந்து கொண்டிருக்கிறது. மக்களை பாதுகாப்பதற்கோ வனவிலங்குகளை அகற்றுவதற்கோ வனத்துறை எந்தவித நடவடிக்கையும் வனதுறை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
வன விலங்குகளில் இருந்து மக்களை காப்பாற்றவும் பிரச்சனைக்குரிய யானையை பிடித்து சரணாலயத்தில் கொண்டு செல்ல கேட்டும், வன எல்லை பகுதியில் மின்சார வேலி அமைக்கவும், அகழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று களியல் சந்திப்பில் நடைபெற்றது.
மேல்புறம் ஒன்றிய தலைவர் ஹரீஸ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர்.டி.சுரேஷ் துவக்கி வைத்தார். அப்போது உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 75க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் வைத்தனர். மண்டபத்தில் பாஜவிகவினர் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நடத்தினனர்.



