மார்த்தாண்டம், செப். 25 –
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் சாதரண மழை முதல் கனமழை வரை பொழிந்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்தது. குறிப்பாக குமரி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான மார்த்தாண்டத்தில் தென்னிந்தியாவிலேயே மிக நீளமான போக்குவரத்து மேம்பாலம் உள்ளது.
குழித்துறை சந்திப்பு பகுதி முதல் மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் இந்த மேம்பாலம் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த பாலத்தால் மார்த்தாண்டம் பகுதியில் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் பாலத்தில் பராமரிப்பு பணிகள் இல்லாதததால் பல்வேறு குற்றசாட்டுகளும் எழுந்துள்ளது. குறிப்பாக பாலத்தில் உள்ள தண்ணீர் செல்ல குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்களில் மண் நிரம்பி தண்ணீர் வெளியே செல்லவில்லை என்ற புகார் ஏற்கனவே உள்ளது. இதை உண்மை என நிருபிக்கும் வகையில் இன்று பெய்த மழையில் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதி மேம் பாலத்தின் மேல் பகுதியில் தண்ணீர் பல மீட்டர் தூரம் குளம் போல் தேங்கிய நிலையில் காணப்பட்டது.
இதனால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது. பாலத்தில் வெள்ளம் தேங்கிய வீடியோ உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாலத்தில் சீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு இந்திய கடல் சார் ஆய்வு மையத்தின் சார்பில் ஆரஞ்சு அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை இன்று 26-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கள்ளக் கடலாக இருக்கும் என்பதால், கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகள் கடலோரப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


