மன்னார்குடி, டிசம்பர் 20 –
தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள், விவசாய பயன்பாட்டுக்காக இலவச மின் இணைப்பு கேட்டு மின்வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும். பதிவு செய்தோர் இணைப்பு அதிகமாக உள்ளதால் தட்கல் முறையில் மின் இணைப்பு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் விவசாயிகள் உரிய கட்டணத்தை செலுத்தி காத்திருப்பு பட்டியலை தவிர்த்து, விரைவாக மின் இணைப்பு பெறலாம். இது சுயநிதியுதவித் திட்டமாகும். இதன் கீழ் பம்ப்செட் திறனுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும்.
இந்நிலையில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் கடந்த 15ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், நடப்பாண்டுக்கான விரைவு தட்கலின் கீழ் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு ஏற்கனவே தட்கல் முறையில் விண்ணப்பம் செய்துள்ளவர்களும், தற்போது பதிவு செய்துள்ளவர்களும் ஆன்லைன் மூலம் வரும் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் இதற்காக 5 ஹெச்.பி வரை மின் பளு பயன்படுத்துவோர் ரூ.2.5லட்சம், ரூ.2.5லட்சம், 5.5 முதல் முதல் 7.5 7.5 ஹெச்பி பயன்படுத்துவோர் 2.75 லட்சம், 7.5 முதல் 10 ஹெச்பி வரை
பயன்படுத்துவோர் ரூ.3 லட்சம், 15 ஹெச்பி வரை பயன்படுத்துவோர் ரூ. 4 லட்சம் வங்கி வரைவோலை மூலம் விண்ணப்பத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.
இதனால் தமிழகம் முழுவதும் குறைந்த பட்சம் 10,000 மின் இணைப்பு வழங்க இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் விவசாயிகள் வங்கி வரைவோலை எடுத்து ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இதற்கான பதிவு கடந்த 18ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பெரும்பாலான விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது தொழில்நுட்ப கோளாறு, வரைவோலை எடுக்க முடியாதது, கால அவகாசம் போதாதது உள்பட பல்வேறு காரணங்களால் பதிவு செய்ய முடியாமல் போனது. இதனால் குறைந்த அளவிலான விவசாயிகளே பதிவு செய்ய முடிந்தது. இது நீண்ட நாள் காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக மன்னார்குடி, திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகள்
மிக குறைந்த எண்ணிக்கையிலே இந்த திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். எனவே இந்த திட்டத்தை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் தமிழ்நாடு தொழில் முதலீட்டு துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா கவனத்துக்கு கொண்டு சென்றனர். இந்த கோரிக்கையை அறிந்து அவர் மின்வாரிய அமைச்சர் சிவசங்கரிடம் கால நீட்டிப்பு செய்யும்படி பரிந்துரைத்தார்.
அதனடிப்படையில் முதல்வரின் வழிகாட்டுதலின் கீழ், மின்பகிர்மான கழகம் சார்பில் தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி (புதன்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காலக்கட்டத்துக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு வழங்கும்
வழிகாட்டுதலும் மற்றும் ஒதுக்கீடு அளவிற்கும் ஏற்ப தட்கல் திட்டத்தின் கீழ் படிப்படியாக விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது டெல்டா விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது கோரிக்கையை ஏற்று தட்கல் விண்ணப்ப பதிவின் கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மின்துறை அமைச்சர் சிவசங்கர், இதற்கு பரிந்துரை செய்த தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு டெல்டா விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.



