மார்த்தாண்டம், ஜூலை 20 –
கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளில் பழங்குடியின மக்கள் வாசிக்கும் குடியிருப்பு பகுதிகள் ஏராளம் உள்ளது. இங்கு கடந்த சில மாதகளாக காட்டு யானைகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் பயிர் வகைகளை சேதப்படுத்துவதும், உயிரிழப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வனத்துறையினர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மோதிரமலை சந்திப்பு பகுதியில் பாலசந்திரன் (80) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டில் மளிகை கடையும் நடத்தி வருகிறார். நேற்று இரவு காட்டுயானை ஒன்று கடைக்குள் புகுந்து சேதப்படுத்தியது. யானை கடையின் கூரையையும், ஜன்னல்களையும் உடைத்து உள்ளே நுழைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசியை சாப்பிட்டதுடன், பல்வேறு உபயோகப் பொருட்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
உடனடியாக பாலசந்திரனும், அவரது மனைவி வீரம்மாள் என்பவருமாக யானையை துரத்த முயன்றனர். ஆனால் யானை அவர்களை திருப்பி துரத்தியதால் கணவனும், மனைவியும் தப்பி ஓடினர். இதை கண்ட பக்கத்து வீட்டு காரர் மணி என்பவர் யானையை துரத்த முயன்ற போது, அவரையும் யானை துரத்தியது. இதையடுத்து இரவில் சத்தம் கேட்டு காணி இன பழங்குடி மக்கள் அந்த பகுதியில் குவிந்தனர். பின்னர் தீ கொளுத்தி, சத்தமிட்டு யானையை அங்கிருந்து துரத்தி அடித்தனர். அதன்பிறகு மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் அச்சத்துடன் காணப்பட்டனர்.
இது குறித்து இன்று காலை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு மேலும் காட்டு யானைகள் அந்த பகுதியில் வர முடியாத அளவில் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். காட்டுயானையின் நடமாட்டம் தொடர்ந்து காணப்படுவதால், வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



