மார்த்தாண்டம், செப். 22 –
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பிரதிநிதிகளுக்கான அரசியல் பயிலரங்கம் கலந்தாய்வு கூட்டம் மார்த்தாண்டத்தில் வைத்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் வரவேற்புரையாற்றினார். திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந் காங்கிரஸ் கட்டமைப்பும் செயல் திட்டங்களும் என்ற தலைப்பிலும், தமிழ்நாடு ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா காங்கிரஸ் வரலாறு, சாதனைகள், சவால்கள் என்ற தலைப்பிலும், முனைவர் பழனித்துரை கிராம சுயாட்சியும், மக்கள் ஆதிகாரமும் என்ற தலைப்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் செந்தமிழ் அரசு எதிர்கால அரசியலில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பிலும், ரதன் சந்திர சேகர் நசுக்கப்படும் கருத்து சுதந்திரம் என்ற தலைப்பிலும், அருண் அசோகன் காங்கிரசும், சோஷலிசமும் என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார்கள். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், தாரகை கத்பர்ட், உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்
பின்னர் சசிகாந்த் செந்தில் எம்பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியில் அவர் கூறுகையில், – தமிழகத்தை பொறுத்த அளவில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் அனைத்து தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் அதைக் கேட்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம். ஆனால் தலைமை ஒரே நிலைப்பாட்டில் உள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது மோடி மந்திரம் ஆகும். ஜிஎஸ்டி வரி போடப்பட்டு பல கம்பெனிகள் மூடப்பட்டது. பல வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டது. இது குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் பதில் சொல்ல வேண்டும். நடிகர் விஜய் காங்கிரஸ் குறித்து பேசவில்லை என்றால், காங்கிரஸ் நல்ல அரசியல் இயக்கமாக உள்ளது. அகில இந்திய அளவில் பாரதிய ஜனதாவுடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்கள் மேல் பாரதிய ஜனதா உட்கார்ந்து பயணித்து காலி செய்து விடுவார்கள். வட இந்தியாவில் பல மாநிலங்களில் இதே நிலைமை நடந்து உள்ளது. அதே நிலைமைதான் தமிழகத்தில் அதிமுகவிற்கும் ஏற்படும் என அவர் கூறினார்.



