நாகர்கோவில், ஜன.22-
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள 113 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு செண்பகராமன் புதூர் குடோன் மூலமாக மதுபானங்கள் அனுப்பி வைக்கபட்டு விற்பனை செய்யபட்டு வருகிறது. சமீப காலமாக குடோனில் இருந்து வரும் மதுபானங்கள் காலாவதியாகி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 90 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் காலவதியான மதுக்களை டாஸ்மாக் கடைகளில் இருந்து திரும்ப பெற்று குடோன் களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து மது ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது நடைமுறை வழக்கம் ஆகும். தற்போது இரண்டு வருடங்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகளில் காலாவதியாகி, திரும்ப பெற்ற மதுபானங்களை குடோனில் வைத்து விட்டு மீண்டும் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதனால் காலாவதியான மதுபானங்களை விற்பனை செய்ய ஊழியர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்த மதுபானங்கள் அட்டை பெட்டியில் மட்டுமே ஸ்கேன் செய்ய முடிவதாகவும். குப்பியில் ஸ்கேன் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் காலாவதியான மதுவை குடிக்கும் மது பிரியர்களுக்கு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை நீடித்து வருவதாகவும், இதனால் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மது பிரியர்கள் இடையே இது சம்பந்தமாக வாக்குவாதங்கள் தினம் தோறும் நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும் இதனால் மன உளைச்சல் உட்பட பல வித பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு டாஸ்மாக் கடைக்கு 25 பெட்டி காலாவதி ஆன மதுபானங்கள் வீதம் உள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் எட்டாயிரம் பெட்டி காலாவதியான மதுபானங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகவே இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் தொழில் சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது சம்பந்தமாக குமரி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் உள்ளனர். மனு அளித்த பிறகும் பல டாஸ்மாக் கடைகளுக்கு இது போன்று காலாவதியான மதுபானங்கள் வருவதால் விற்பனையாளர்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது என தமிழ்நாடு மாநில வாணிப கழக தொழில் சங்க தலைவர் மோஸ்லின் பியர்சன் தனது பேட்டியில் தெரிவித்தார்.



