கன்னியாகுமரி, மார்ச் 19 –
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் வேலப்பன் மனைவி மனோன்மணி (78). இவர் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் மனோன்மணி தனக்கு தெரிந்த நபரை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது நரிகுளம் காலனி பஸ் நிலைய சந்திப்பு பகுதியில் செல்லும் போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று மனோன்மணி மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மனோன்மணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கன்னியாகுமரி போலீசார் மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மனோன்மணி மகன் சுரேஷ் என்பவர் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விபத்து ஏற்படுத்திய அகஸ்தீஸ்வரம் பகுதி சேர்ந்த முருகன் மகன் நீல ராஜன் (23) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


