நாகர்கோவில், செப். 27 –
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்திற்கு பின்பு கடந்த சில வாரங்களாக கடும் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்து நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. ரப்பர் பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டு பால் வடிப்பு முடங்கும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் கடந்த இரு நாட்களாக மீண்டும் குமரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் முதல் இடைவிடாது அடை மழை பெய்து வருவதால் குமரியில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.
இந்த கனமழை காரணமாக மலைகளில் இருந்து வரும் ஆறுகள், நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தி ஆகும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. திற்பரப்பு அருவியில் வரும் கோதை ஆற்றில் தண்ணீர் அதிகரித்து உள்ளதால், திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியின் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்து கலங்கிய நிலையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருகில் உள்ள நீச்சல் குளத்தை மூழ்கடித்து தண்ணீர் சீறிப் பாய்கிறது. இதனால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருவதால் பயணிகள் வருகை குறைந்து திற்பரப்பு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
இதுவென்று குமரியின் மற்றொரு சுற்றுலாத்தலமான காளிகேசத்திலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சென்று இயற்கை அழகை ரசித்து செல்வது வழக்கம். அங்கு பாயும் ஆற்றில் குளித்தும் மகிழ்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் காளி கேசத்திலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள தரைப்பாலம் முழ்கி தண்ணீர் ஒடுகிறது. சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



