கருங்கல், அக். 16 –
கிள்ளியூர் தாலுகா, மத்திகோடு கிராமத்திற்குட்பட்ட மூவர்புரம் பகுதியில் உள்ள இலுப்பைகுளம் உள்ளது. இந்த குளத்தின் புறம்போக்கில் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியை சேர்ந்த 9 பேர் வீடுகள் கட்டி உள்ளனர். இவர்களில் 1 நபரை தவிர அனைவருக்கும் அரசு சார்பில் இலவச வீடுகளும் வீட்டுமனைகளும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளதால் இப்பகுதி வழியாக விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு செல்லவும் மற்றும் உரம், விளை பொருட்களையும் கொண்டு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து விவசாயிகள் இலுப்பை குளத்தின் கரைகளை நீர்நிலை இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி விவசாய நிலங்களுக்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து உயர்நீதிமன்றம் குளத்தின் கரைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள அனைத்து வீடுகளையும் உடனடியாக முழுவதுமாக அகற்றி அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், நீர்வளத்துறை மற்றும் மாவட்ட வருவாய் துறைக்கு உத்தரவிட்டது.
அதனடிப்படையில் வீடுகளை வருவாய் துறை அதிகாரிகள், உதவி பொறியாளர் ராஜேஸ், கிள்ளியூர் மண்டல துணை வட்டாச்சியர் எட்வர்ட் ராஜ சேகர், மிடாலம் வருவாய் ஆய்வாளர் பிரபுதாஸ் ஆகியோர் ஆலோசனையின் பேரில், மத்திகோடு கிராம நிர்வாக அலுவலர் தீபநிலா, நீர்வளத்துறை அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் ஜோசிபி இயந்திரம் மூலம் இடித்தனர்.
மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முருகன் என்பவருக்கு மாற்று இடம் வழங்கப்படாததால் அன்னாரது வீடு மட்டும் அகற்றப்படவில்லை. நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்களை வருவாய் துறை அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றிய சம்பவம் மத்திகோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



