நாகர்கோவில், ஜூன் 17 –
கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று 17-ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: கன்னியாகுமரி பழத்தோட்டம், பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 40க்கும் மேற்பட்ட வாழைப்பழ இரகங்கள், பல்வேறு வகை கொண்ட மாம்பழங்கள், அன்னாசிபழம், பலாப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளை நடவு செய்து, விவசாயிகளுக்கு வழங்கி பயன்பெற்று வருகிறார்கள்.
அதனடிப்படையில் பேச்சிப்பாறை மணலோடைக்கு இடைப்பட்ட அன்புநகர் பகுதியில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் தேனீ மகத்துவ மையம் 2025ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் மார்த்தாண்டம் தேன் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. குறிப்பாக தேன் மருத்துவ குணங்கள் நிறைந்தது.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 25 விவசாயிகளுக்கு 5 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் தேனீக்கள் வளர்த்தல், தேன் தயாரித்தல், பதப்படுத்துதல் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெறுவதையும், தேன் வகைகளை தரம் பிரிப்பது குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் கட்டுப்பாட்டில் குலசேகரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் ரப்பர் உற்பத்தி நிறுவனம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து திருவட்டார் புத்தன்கடை பகுதியில் விவசாயிகள் தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பலா மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டிருப்பதை நேரில் பார்வையிடப்பட்டது. வியட்நாம் பழங்கன்றுகள் 16 மாதத்தில் காய்க்கும் தன்மை வாய்ந்ததோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். இதுபோன்று தாய்லாந்லிருந்து இறக்குமதி செய்பட்ட பலா மரக்கன்றுகள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் சுவையுடையது. தற்போது மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 3 ஹெக்டர் அளவில் இக்கன்றுகள் நடவு செய்யப்பட்டள்ளது. எனவே விவசாயிகள் இது போன்று அதிக இலாபம் பெறக்கூடிய பழவகைகள் மற்றும் காய்கறிகளை நடவு செய்து வாழ்வாதாரத்தை உயர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் இணை இயக்குநர் வேளாண்மை வாணி, தோட்டக்கலை துணை இயக்குனர் நக்கீரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை கீதா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் துணை தோட்டக்கலை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



