களியக்காவிளை, நவ. 4 –
விளவங்கோடு ஊராட்சியில் பத்து ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் செய்யாமல் சேதமடைந்த ரோட்டை தார் தளம் அமைக்க அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக விளவங்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.எஸ். கிருஷ்ணன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் விளவங்கோடு ஊராட்சியில் ஈத்த விளைமேல் பகுதியான பத்ரோஸ்வரி அம்மன் ஆலயம் முதல் திருத்துவபுரம் நெடுஞ்சாலை வரை ரோடு மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மக்கள் பயணிக்க முடியாத நிலையில் இந்த சாலை உள்ளது.
இந்த ரோட்டை பொறுத்தவரையில் அதிகமான மக்கள் பள்ளி கல்லூரிகளுக்கும், முந்திரி ஆலைகளுக்கும், நெடுந்தூர பயணங்களுக்கு திரித்துவபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு போவதற்கும் பயன்படுத்தும் இணைப்பு சாலை ஆகும். மேலும் காலையிலும், மாலையிலும் அதிகமான பள்ளி வாகனங்கள் செல்லும் ஒரு வழித்தடம் ஆகும்.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித வேலையும் நடைபெறவில்லை. தற்போது மழைக்காலம் ஆனதால் மழைநீர் தேங்கி பள்ளங்கள் தெரியாமல் மக்களும், வாகன ஒட்டிகளும், மிகவும் அவதிப்படுகிறார்கள். ஆகவே தாங்கள் உடனடியாக இந்த சாலையில் தார் தளம் அமைத்து சீரமைக்க பணிவுடன் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் மாவட்ட கலக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


