நாகர்கோவில், ஜூலை 14 –
சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம், ஈத்தங்காடு பகுதி சேர்ந்தவர் சபரிவர்மன் (33). இவர் தனது வீட்டின் அருகே பெட்டி கடை நடத்தி வந்தார். இவருக்கு ஆனந்த வல்லி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 9ம் தேதி சபரிவர்மன் கடையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சபரி வர்மனை போலீசார் கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த சபரி வர்மன் நேற்று முன்தினம் காலை திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சிறை துறையினர் அவரை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்ற போது அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
சபரி வர்மன் இறந்த தகவல் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டு, இதை அடுத்து அவர்கள் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன் குவிந்தனர். அவரது மரணத்தின் சந்தகை இருப்பதாகவும், உடலை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
சபரிவர்மனின் தாய் மற்றும் மனைவியை மட்டும் சபரி வர்மனின் உடலை பார்க்க அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டு, பிணவறைக்குள் வைக்கப்பட்டுள்ள சபரி வர்மன் உடலை பார்த்தனர். பின்பு வெளியே வந்தவர்கள் சபரி வர்மனின் உடலில் தாக்கியதற்கான காயங்கள் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து சபரி வர்மனின் குடும்பத்தினர் இடம் நீதிபதி சத்தியமூர்த்தி விசாரணை நடத்தினார். அவரது உடலில் காயங்கள் இருப்பதாக குடும்பத்தினர் கூறியதால், காயங்கள் ஏதும் உள்ளதா? என்பதை கண்டுபிடிக்க எக்ஸ்ரே எடுக்க முடிவு செய்யப்பட்டு, நேற்று முன்தனம் இரவு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
அதன் பிறகு பின்னர் இன்று நீதிபதி சத்யமூர்த்தி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்காக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சபரி வர்மனின் உடலை பரிசோதனை செய்தனர்.
இதற்கிடையில் சவரி வர்மனின் சாவு குறைத்து விசாரணை நடத்துவதற்காக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் நாகர்கோவில் சிறைச்சாலைக்கு இன்று சென்றார். அங்கு சிறை காவலர்கள் மற்றும் சக கைதிகளிடம் விசாரணை நடத்தினார்.
இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னர் சபரி வர்மன் உடலில் காயங்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இதன் சபரி வர்மன் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக் கொள்ளவில்லை. பெற்றுக்கொள்ளாமல் அங்கு மீண்டும் போராட்டம் நடத்தினர். அந்த பகுதியில் போலீசார் மீண்டும் குவிக்கப்பட்டனர். இதற்கு இடையில் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் நீதிபதி சத்தியமூர்த்தி நேரடியாக சிறைச்சாலையில் சென்று விசாரணை நடத்தினார்.


