மார்த்தாண்டம், ஜுன் 1 –
2014 – 2016 காலகட்டத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சார்பாகக் கீழடி அகழாய்வு, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட ஆய்வறிக்கையை வெளியிட மிடாலக்காடு தாகம் கலைக்குழு தலைவர் ஏம்.எ.சாந்தகுமார் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கீழடியில் கிடைக்கப் பெற்ற பொருட்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திற்கு 2023 ஜனவரி மாதத்தில் முறைப்படி சமர்ப்பித்துள்ளார். அறிவியல் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் கீழடியின் காலம் கி.மு.800 – 500 வரை என்பதாக அவர் வரையறுத்துள்ளார்.
ஆனால், போதிய உண்மையான காரணங்களோ, மதிப்புயர் நியாயங்களோ இன்றி அமர்நாத் சமர்ப்பித்த ஆய்வறிக்கையினை மறுத்து, அவரின் ஆய்வறிக்கையை மேம்படுத்தி அனுப்புமாறு இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அவருக்கே திருப்பி அனுப்பியது. இந்த அறிக்கையை அனுப்பிய இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் உறுப்பினர் குழுவில் உள்ள எவரும் கீழடிக்கு வந்ததே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தனக்கு அனுப்பிய அறிக்கை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கப் பட்டதாக அமர்நாத் தெளிவுபடுத்துகிறார்.
ஆனால், எவ்விதப் புறச் செல்வாக்கிற்கும் உள்ளாகாமல், உண்மையான மற்றும் சரியான அறிக்கையைக் கடமை உணர்வோடும் மனச்சாட்சியோடும் சமர்ப்பித்ததாகக் கூறி, தனது ஆய்வறிக்கையை மாற்றி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என அமர்நாத் திட்டவட்டமாக எழுத்து வடிவில் தெரிவித்து விட்டார். ஆனால் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அறிக்கையைத் திருத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவதை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துறைவாரியான கடிதப் போக்குவரத்தோடு இந்த முக்கியமான செய்தி முடங்கி விடுவது ஏற்புடையதல்ல. அமர்நாத் தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் இருப்பது பெரும் ஐயத்தை உண்டாக்குகிறது. இதனால் உண்மை நிலை என்ன என்பதை அறிய முடியாமலும் இருக்கிறது. எனவே இத்தகைய குழப்பத்தைப் போக்கும் வகையில், அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி ஆய்வறிக்கையின் மூலப்பிரதியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உடனடியாகப் பொதுவெளியில் வெளியிட்டு, அனைவரின் ஐயத்தையும் போக்க வேண்டும்.
மேலும், அமர்நாத் ராமகிருஷ்ணன் நிலைப்பாட்டை ஆதரித்தும், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் அறம், விதிகள், விழுமியங்களுக்கு எதிராகத் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை ஏற்க மனமின்றிச் செயல்படும் போக்கினைக் கண்டித்தும் முந்தைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருந்தது.
தமிழகத்தின் தொன்மையை அறிவியல் வழியில் நிறுவும் அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசும் உரிய அனைத்து வழிகளிலும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள கன்னியாகுமரி மாவட்ட தாகம் கலைக்குழு சார்பாக வேண்டுகிறோம்.


