பூதப்பாண்டி, மார்ச் 23 –
கீரிப்பாறை அருகே காளி கேசத்திலிருந்து மணலோடை செல்லும் சாலையில் குலசேகரத்தை சேர்ந்த ரூபன் என்பவருக்கு சொந்தமான அன்னாசிப்பழத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அருண்குமார் சிங் (31) என்பவர் தங்கி இருந்து தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடன் வேறு சில வட மாநில தொழிலாளர்களும் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அன்னாசிப்பழத் தோட்டம் அருகே அருண்குமார் சிங் உடலில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்த அந்தப் பகுதி வழியாக சென்றவர்கள் கீரிப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அருண்குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற காரணம் உடனடியாக தெரியவில்லை.
இதையடுத்து போலீசார் அருண்குமார் சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். கொலை தொடர்பாக அருண்குமார் சிங்குடன் வேலை பார்த்த 4 வட மாநில தொழிலாளிகளை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


