கிருஷ்ணகிரி, ஜூலை 1 –
கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் முத்து விழா மற்றும் கொடியேற்று விழா வட்டத் தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், சங்கத்தின் மாநிலத் தலைவர் பூபதி கலந்துகொண்டு சங்கக் கொடியினை ஏற்றி, விழாவைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து, பொதுச்செயலாளர் சாந்தராஜ் சங்க கல்வெட்டுப் பலகையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர் முகமது சுபான் வரவேற்புரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் பரமசிவம், மாவட்டத் துணைத் தலைவர் முருகன், மாவட்ட அமைப்புச் செயலாளர் சாமிதுரை, மாவட்ட பிரச்சார செயலாளர் முனீர், மாவட்ட இணைச் செயலாளர் கோபு, மாவட்ட துணைச் செயலாளர்கள் வெங்கடேசன், மகபூப் பாஷா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேளான் மாநிலச் செயலாளர் சுந்தரவடிவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில பொதுச் செயலாளர் சுந்தர்ராஜ் விழா பேருரையும் மாநில பொருளாளர் செந்தில்குமார் வாழ்த்துறையும் வழங்கினார்கள்.
8 வட்டங்களைச் சேர்ந்த சுமார் 120-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டு இணையவழி சான்றிதழ் வழங்க அரசு கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். அந்த தீர்மானத்தில் பொதுமக்களுக்கான சேவைகளை விரைவாக வழங்கும் நோக்கில், சான்றிதழ்களை 5 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், அதற்கான போதிய தொழில்நுட்பக் கட்டமைப்பை அரசு இன்னும் உருவாக்கித் தரவில்லை. சான்றிதழ்கள் வழங்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிம்கார்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதற்கான கையடக்கக் கணினி மற்றும் இணையவழிச் சேவைக்கான மாதாந்திர கட்டணங்களை வழங்கவில்லை.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது சொந்தப் பணத்திலிருந்தே அந்த கட்டணங்களை செலுத்தி வருகின்றனர். ஆகவே, புதிய அரசு உடனடியாக தலையிட்டு, இணையவழிச் சான்றிதழ்கள் வழங்கத் தேவையான கையடக்கக் கணினி மற்றும் இணையக் கட்டணச் செலவுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். இந்த கூட்டத்தில் வருவாய் துறையை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் வட்ட பொருளாளர் வினோத்குமார் நன்றிஉரை ஆற்றினார்.



