கிருஷ்ணகிரி, ஜூன் 3 –
தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தேர்தல் அறிக்கையில் வெளியிட்டவாறு பயிர் கடன்களை தள்ளுபடி செய்து உள்ளது. இந்த பயிர் கடன் தள்ளுபடி திட்டம் ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் இராமகவுண்டர் தலைமையில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஏக்கருக்கு குறைவாக உள்ள நிலங்களுக்கு விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்களுக்கு 50 சதவீதம் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.50,000 கடன் தள்ளுபடியும், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள கடன்களுக்கு 5 ஆயிரமும் ரூபாய் தள்ளுபடியும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு விவசாயி ஒருவருக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு விவசாயிகளை ஏமாற்றி உள்ளதாக கூறி, விவசாயிகள் கோசங்களை எழுப்பினார்கள்.
இந்த ஆர்பாட்டத்தினை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் இராமகவுண்டர் விஜய் தலைமையில் ஆட்சி அமைய வேண்டி விவசாயிகள் அனைவரும் ஆதரவு அளித்தோம். ஆனால், எதிர்பார்த்தபடி விவசாயிகளின் கடன் தள்ளுபடி திருப்தி அளிக்க வில்லை முதல்வர் விஜய் அவர்களுக்கு யாரோ தவறான வழியை காட்டுகின்றனர். இதில் இருந்து முதல்வர் வெளியில் வர வேண்டும், தமிழக நிதி நிலையில் ரிசர்வ் வங்கி தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். முதல்வர் விவசாயிகளின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வார் என்ற நம்பிக்கை, விவசாயிகள் மத்தியில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.



