ஈரோடு, மார்ச் 26 –
அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக கியாஸ் விலை அதிகரித்து உள்ளது. மேலும் கியாஸ் சிலிண்டரும் உரிய நேரத்தில் கிடைப்பது இல்லை. எப்போது வேண்டுமானாலும் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் பொது மக்கள் கியாஸ் அடுப்பில் இருந்து மண் அடுப்புக்கு மாற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதனால் மண்பாண்டம் விற்கும் கடைகளில் மண் அடுப்புகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
மேலும் பொது மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்ந்த தண்ணீரை அருந்துகின்றனர். பிரிட்ஜில் உள்ள தண்ணீர் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்
மண்பானை தண்ணீரை மக்கள் அதிகம் அருந்துகின்றனர். இதனால் மண் பானைகளின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பானைகள் ஈரோடு நசியனூர் அம்மன் டிரேடர்சில் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 5 லிட்டர் முதல் 25 லிட்டர் வரை இங்கு மண் பானைகள் உள்ளன.
இது பற்றி அம்மன் டிரேடர்ஸ் உரிமையாளரும் ஈரோடு மண்பாண்ட அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்க தலைவருமான வெங்கடாசலம் கூறியதாவது: இப்போது கோடைகாலமாக இருப்பதால் மண்பானைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. பொது மக்களின் ரசனைக்கு ஏற்ப மண் பானைகளில் பைப் வைத்தும் கொடுக்கிறோம். மேலும் மண் பானைகளின் வெளிப்புறத்தில் பீங்கான் வைத்தும் தயார் செய்கிறோம். இதை வட இந்தியர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும் கோவில் திருவிழாக்களின் போது அக்னி சுட்டிகள் வேண்டுதல் பொம்மை உருவுகளும் தயார் செய்து கொடுக்கிறோம். கியாஸ் விலை உயர்வு, தட்டுப்பாடு காரணமாக மண் அடுப்புகளின் விற்பனையும் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


