ஆரல்வாய்மொழி, மார்ச் 04 –
மயிலாடி கல் சிற்பம் மற்றும் கோயில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய் சுந்தரத்திடம் மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்சிற்ப தொழிலுக்காக புவிசார் குறியீடு பெற்ற மயிலாடியில் சிற்ப வேலைகளுக்கு கற்கள் கிடைக்காமல் தொழிலாளர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளார்கள். இதனால் சிற்ப தொழில்கள் செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மயிலாடி கல் சிற்பம் மற்றும் கோயில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரத்திடம் மனு அளித்துள்ளார்கள். இப்பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் நிரந்தர தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தோவாளை முகாம் அலுவலகத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரத்திடம் மயிலாடி கல் சிற்பம் மற்றும் கோயில் கட்டுமான தொழிலாளர் சங்க துணைத் தலைவர் ராஜ்குமார், செயலாளர் கோபி, பொருளாளர் சுந்தர், கண்ணன், கலைச்செல்வன் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என்.தளவாய்சுந்தரம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மயிலாடி பேரூராட்சியில் கல் சிற்ப தொழில்கள் சிறப்புற நடைபெற்று வந்தன. கல் சிற்ப தொழிலுக்கு புகழ் பெற்ற பகுதியாக மயிலாடி இருந்து வருகிறது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருக்கோயில்களுக்கு தேவையான சிற்பங்கள் வாங்குவதற்கு விரும்பி இப்பகுதியை நாடி வந்து சிற்பங்களை ஆர்டர் செய்து வாங்கி செல்கின்றனர். மயிலாடி கல் சிற்ப தொழிலுக்காக புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற பெருமைக்குரிய பகுதியாகும். கல் சிற்பங்கள் செய்வதற்குரிய சிறப்பான இடமாக மயிலாடி உள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் அரசு அனுமதி பெற்ற கல் குவாரிகள் உள்ளன. இங்கிருந்து சிற்ப தொழிலுக்கு தேவையான கற்கள் எடுத்து வரப்படுகிறது. தற்போது தொழில் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பொய்யானவர்கள் பொய்யான புகார்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி இதன் மூலம் இத்தொழிலினை தடை செய்து வருகிறார்கள். இதனால் சிற்ப தொழில் செய்வதற்குரிய கல் சரிவர கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மயிலாடியில் கல் சிற்ப தொழில்கள் செய்வதற்குரிய கற்கள் தடையின்றி கிடைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் முறையாக சட்டத்திற்கு உட்பட்டு போதிய கற்கள் குமரி மாவட்ட குவாரிகளிலிருந்து கிடைத்திட வழி செய்து உதவிடுவதற்கு அரசு உரிய நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிக்கையில் கூறியுள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் மற்றும் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


