பூதப்பாண்டி, செப்டம்பர் 27 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள முக்கடல் அணைப்பகுதியில் அங்கு பணி செய்யும் பணியாளருக்கு ஓய்வெடுக்க வேண்டி அப்போதைய பொதுப்பணி துறை சார்பில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக ஓட்டினால் ஆன ஓய்வறை கட்டப்பட்டிருந்தது. அந்த கட்டிடம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் பாழாகி காணப்பட்டது. அந்த அணைப்பகுதியிலிருந்து நாகர்கோவில் நகராட்சிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
பின்னர் அது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பும் மாநகராட்சிக்கும் அதை சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் இங்கிருந்து தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக பல அதிகாரிகளும், பொறியாளர்களும் இங்கு வந்து குடிநீர் சம்பந்தமான பிரச்சனைகளை பார்த்து சரி செய்வதை வழக்கமாக கொண்டு வந்தனர். எனினும் இந்த பழைய கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் நேற்று அந்த கட்டிடத்தின் மேல் கூரை முற்றிலும் சேதமடைந்து விழுந்தது.



