சிவகங்கை, ஆக. 30 –
சிவகங்கை அரண்மனை வாசலில் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் காலி மதுப் பாட்டில்களை திரும்பப் பெறுவதில் ஊழியர்களை நிர்ப்பந்தப்படுத்துவதாக குற்றம் சாட்டினர் .
மேலும் இது போன்ற நடவடிக்கைகளை நிர்வாகம் கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து பேசினார்கள் . அப்போது சி.ஐ.டி.யு – சம்மேளனத் தலைவர் முருகன் செய்தியாளிடம் தெரிவித்ததாவது: காலி மதுப் பாட்டில்களை திரும்பப்பெறும் விஷயத்தில் டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களை கட்டாயப்படுத்தி வருகிறது. இதை நாங்கள் கண்டிக்கிறோம்.
இந்த விஷயத்தில் நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மதுப் பாட்டில்களை திரும்ப பெற வேண்டும் என கூறி இருக்கிறது. ஆனால் நிர்வாகம் அதை கண்டு கொள்ளாமல் ஊழியர்களை தொடர்ந்து நிர்பந்தப்படுத்தி வருகிறது. இதனால் இன்று அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் எனவும் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.



