இராமநாதபுரம், பிப். 24 –
கமுதியில் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வாகனங்கள் கடைகள் மீது மோதி சேதத்தை ஏற்படுத்திய வாலிபர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வார சந்தை பேட்டை அருகேயுள்ளது சிங்கபுலியாபட்டி. இந்த பகுதியை சேர்ந்தவர் நாகவடிவேல் (29). இவர் நேற்று தனது காரில் நண்பர்களான முனியசாமி (36) உள்ளிட்ட நான்கு பேருடன் கமுதி வந்தார். காரை நாகவடிவேல் ஓட்டி வந்தார். ஏற்கனவே நான்கு பேரும் மது அருந்தியிருந்தனர். மீண்டும் மது அருந்த நினைத்தனர். இதற்காக கமுதி பேரூந்து நிலையம் எதிரே குண்டாற்று கரையில் உள்ள டாஸ்மர்க் கடைக்கு சென்றனர்.
அப்போது எதிரே டூவிலரில் அலெக்ஸ் பாண்டியன் (30) என்பவர் வந்தார். போதையில் இருந்த நாகவடிவேல் அவருக்கு வழிவிடாமல் மோதியதில் டூவிலர் சேதமடைந்தது. அலெக்ஸ் பாண்டியன் இதுகுறித்து தட்டிக் கேட்க வந்தபோது காரில் இருந்து முனியசாமி மற்றும் 2 பேர் கிழே இறங்கி சமாதானம் பேச சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த நாகவடிவேல் காரை வேகமாக ஓட்டி சென்று மோத முற்பட்டபோது அலெக்ஸ் பாண்டியன் மற்றும் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். முனியசாமிக்கு காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.
தொடர்ந்து காரை போதையில் தாறுமாறாக ஓட்டிய நாக வடிவேல் பஸ்நிலைய பகுதியில் உள்ள கடைகள், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஏற்றியுள்ளார். இதனால் அந்த பகுதில் முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது. காரை ரிவர்ஸ் எடுத்தும் வேகமாக ஓட்டியும் சென்றதால் காரை யாரும் மறிக்கவோ தடுத்து நிறுத்தவோ முடியவில்லை. கடைசியாக காரின் மீதும் பழக்கடையின் மீது மோதி நின்றது.
இதனைதொடர்ந்து அந்த பகுதியில் இருந்த மக்கள் ஒடி வந்து காரை சூழ்ந்து கொண்டனர். மதுபோதையில் இருந்த நாகவடிவேலை காரில் வைத்தும் வெளியே இழுத்து சென்று தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த முனியசாமி உள்ளிட்டோரை கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கமுதி போலீசார் நாகவடிவேல் மீது 4 பிரிவுகளிலும் முனியசாமி உட்பட மேலும் இருவர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் படுபயங்கரமாக வைரலாகி வருகின்றது.



