கன்னியாகுமரி, செப். 20 –
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழாவில் அம்மனுக்கு அபிஷேகம் நடத்த கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விசுவநாதர் கோவில் உள்ள கிணற்றிலிருந்து வெள்ளி குடத்தில் தண்ணீர் எடுத்து நெற்றி பட்டம் அணிவித்து, அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து அர்ச்சகர் பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வருவார். ஆனால் குமரி அம்மன் கோவிலில் கடந்த சில ஆண்டுகளாக யானை ஊர்வலம் இல்லை. இதனால் அந்தப் பகுதியை சேர்ந்த 48 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் இந்து அமைப்புகள் சேர்ந்தவர்கள் கன்னியாகுமரியில் போராட்டம் நடத்தினார்கள்.
இதை அடுத்து இந்த ஆண்டு கடந்த மே மாதம் நடந்த வைகாசி விசாகத் திருவிழாவின் போது தனி நபரின் நன்கொடையின் மூலம் வனத்துறை அனுமதி பெற்று யானை பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வருகிற 23ஆம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை நடக்கும் நவராத்திரி திருவிழாவின் போது, பாரம்பரிய முறைப்படி 10 நாட்கள் அம்மனுக்கு அபிஷேகத்திற்கு புனித நீர் எடுத்து வருவதற்கு யானை பயன்படுத்த கன்னியாகுமரி பகுதியில் உள்ள 48 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவுக்கு வரும் யானைகளை கன்னியாகுமரி விவேகானந்த புரம் சக்கர தீர்த்த காசி விசுவநாதர் கோவில் வளாகத்தில் நிறுத்தி வைத்து பராமரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் யானைகள் பாதுகாப்பு குறித்து வனத்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் வனத்துறையினர் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி உள்ளனர். இதை தொடர்ந்து இந்த ஆண்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவிற்கு 10 நாட்களும் யானை மூலம் புனித நீர் எடுத்து வரப்படுகிறது.


