கன்னியாகுமரி, ஜூலை 13 –
கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (29). இவர் தனக்கு சொந்தமான நாட்டுப் படகில் அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் (65), சுரேஷ் (59), மதின் (29) ஆகியோருடன் நேற்று அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து விட்டு காலை 8 மணிக்கு கரை திரும்பினர்.
அப்போது அலையில் சிக்கி இவர்களது படகு கவிழ்ந்தது. இதனால் 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதை கரையிலிருந்து பார்த்த மீனவர்கள் கடலில் குதித்து அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு வந்தனர். கவிழ்ந்த படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இருப்பினும் படகில் இருந்த என்ஜின், வலைகள் மற்றும் மீன்கள் கடலில் மூழ்கி சேதமடைந்தன.
இது பற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.


