மார்த்தாண்டம், ஜூலை 13 –
மாத்தூர் தொட்டி பாலம் அருகே அலுவலகம் என்று துவங்கப்பட்டு அனுமதி இன்றி நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு வரும் கிறிஸ்தவ வழிபாடு கூடத்தை சீல் செய்து மூட வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மற்றும் அதிகாரிகளை கண்டித்து நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் திருவட்டாறு, காங்கரை சந்திப்பு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சி சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து முன்னணி பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவட்டாறு ஒன்றிய தலைவர் ஐயப்பன், பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ஆர் டி சுரேஷ், கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார் உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை தொடர்ந்து மாத்தூர் செல்லும் சாலை தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து இரண்டு டிஎஸ்பி ஒரு ஏடி எஸ்பி தலைமையில் 500 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக குலசேகரம் மார்த்தாண்டம் சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



