குளச்சல், நவ. 14 –
வெள்ளிச்சந்தை அருகே முட்டம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி பிளஸ் 2 முடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த சிறுமிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்குமுன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சிறுமி தனது இன்ஸ்டாகிராம் காதலனை சந்திக்க சென்றுள்ளார். சிறுமியை அந்த இளைஞர் கன்னியாகுமரி அழைத்து சென்றுள்ளார். அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து 2 பேரும் தங்கியுள்ளனர். அங்கு வைத்து திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், சிறுமியை மறுநாள் அவரது ஊருக்கு செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டு இளைஞர் தப்பியோடிவிட்டார்.
மறுநாள் மாலை சிறுமி வீட்டிற்கு சோர்வடைந்த நிலையில் வந்தார். அவரிடம் சிறுமியின் தாயார் விசாரித்துள்ளார். அப்போது, தனக்கு நடந்த கொடூரம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் குளச்சல் மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கு இடையில் போலீசின் முதற்கட்ட விசாரணையில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி அதன் மூலம் சிறுமியை வலையில் விழ வைத்துள்ளது தெரிய வந்தது. இதை எடுத்து குளச்சல் மகளிர் போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் உதவியை நாடினர். சைபர் கிரைம் போலீசார் வாலிபர் குறித்து துப்பு துலக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதற்கிடையில் அந்த சிறுமியை வாலிபர் அழைத்து சென்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆராய்ந்து இந்த வாலிபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


