தஞ்சாவூர், மார்ச் 30 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்படும் தனியார் நிதி நிறுவனம் கடன் வழங்குவதாக வாடிக்கையாளர்களையும், வேலை பார்த்தவர்களையும் ஏமாற்றி விட்டதாக அங்கு பணியாற்றிய பணியாளர்கள் ராஜா கிட்டப்பா என்பவரது தலைமையில் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களுக்கு தனி நபர் கடன் ரூ. 30 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தனர். இதை 18 தவணையாக மாதந்தோறும் செலுத்த வேண்டுமெனவும், உறுப்பினர் கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும் எனவும் அறிவித்திருந்தது. இதற்காக ஆதார், பான் அட்டைகள் உள்ளிட்டவற்றை வாங்கி நிதி நிறுவனத்துக்கு கொடுத்தோம்.
மாவட்டத்தில் கும்பகோணம், மாரியம்மன் கோயில், செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி என பல இடங்களில் செயல்பட்ட இந்த நிதி நிறுவனம் சார்பில் 6 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு ரூ.30 லட்சம் ரொக்கத்தைப் பெற்று நிதி நிறுவனத்திடம் வழங்கினோம். நிதி நிறுவனம் கூறியபடி கடன் தொகை தரவில்லை.
பணம் கொடுத்தவர்கள் நாள்தோறும் நிறுவனங்களுக்கு வந்து எங்களை மிரட்டி ரொக்கம் மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.ரொக்கத்தைப் பெற்றுக் கொண்ட நிதி நிறுவன உரிமையாளர்களை நாங்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதேபோல 100-க்கும் அதிகமான பணியாளர்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் தரவில்லை. எனவே, மோசடியாக பெறப்பட்ட தொகையை மீட்டுத்தர வேண்டும்.
மேலும், பொதுமக்களின் ஆவணங்களைக் கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்துள்ளதால், அதை வேறு முறைகேடுகளுக்கு பயன்படுத்தக்கூடும் என்பதால், நிதி நிறுவனத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



