புதுக்கடை, நவ. 4 –
புதுக்கடை அருகே உள்ள ராமதுரை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட் புரூஸ். இவர் தேங்காப்பட்டணத்தை சேர்ந்த சேர்ந்த முகமது அன்சார் (66), முகமது பசில் (62) ஆகியோரிடம் இருந்து அந்தப் பகுதியில் அவர்களுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தை அரசு நிர்ணயத்துள்ள விலைப்படி வாங்கி, பத்திரப்பதிவு செய்து கொண்டார். பின்னர் அந்த பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுமார் ஆறு அடி நிலம் இலவசமாக விட்டுக் கொடுத்துள்ளார்.
பின்னர் கடந்த மாதம் 20ம் தேதி அன்று அந்த இடத்தில் பக்க சுவர் கட்ட சென்ற போது, முள்ளூர்துறையை சேர்ந்த சிலர் வந்து காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் இதற்கான ஆவணங்களுடன் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. புதுக்கடை போலீசார் மனுவை பெற்றுக் கொண்டு விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது ராபர்ட் புரூஸ் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அனைத்து ஆவணங்களுடன் புகார் மனு அளித்துள்ளார். அதில் விலை கொடுத்து வாங்கிய தனக்கு சொந்தமான இடத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்கு முன் விரோதம் காரணமாக எதிர்ப்பு தெரிவித்து வருபவர்கள் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


