திருப்பூர், ஜூலை 16 –
அரசின் அனைத்து நலத்திட்டங்கள் சேவைகள் தங்குதடையின்றி மக்களுக்கு விரைந்து சென்றடைவதை உறுதி செய்திடும் உன்னத நோக்கத்துடன் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று முதல் இன்று காலை 9.00 மணி வரை பல்வேறு அரசுதுறைகளின் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்கள்.
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேற்றைய தினம், மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட நந்தவனப்பாளையம் ஊராட்சி ஆத்திக்காடு கிராமத்தில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாகவும், வெறுவேடம்பாளையத்தில் உள்ள கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், தும்பலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சின்னக்காளியம்மன் கோவில் வீதி, அம்பேத்கர் நகர், தாராபுரம் நகராட்சி சிறுவர் பூங்கா, காமராஜபுரம் பள்ளி மாணவர்கள் சமூக நீதி விடுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம், நஞ்சியம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் குறித்தும், நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணி, நஞ்சியம்பாளையம் ஆவின் தொகுப்புப்பால் குளிரகம் மற்றும் நஞ்சியம்பாளையத்த்தில் நடைபெற்று வரும் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.



