நாகர்கோவில், ஏப். 27 –
ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் தாவீது (30). தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரும் இவரது நண்பர் ஸ்டான்லி ஜோஸ் என்பவரும் நேற்று முன்தினம் இரவு 10:30 மணி அளவில் பைக்கில் மூவேந்தர் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த சாலையில் அஜாக்கிரதையாக கவனக்குறைவுடன் டாரஸ் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த லாரியின் பின்னால் பைக் மோதியது.
இதில் பைக் ஓட்டி வந்த ஸ்டாலின் ஜோசப் தலையில் படுகாயம் ஏற்பட்டு, காதுகளில் இருந்து ரத்தம் வடிந்தது. பைக்கின் பின்னால் இருந்த தாவீதுக்கு தலை, முகம் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த இருவரும் வெவ்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி கேரளா பதிவு எண் கொண்ட அந்த டாரஸ் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஸ்டாலின் ஜோஸ் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.


