ஈரோடு, செப். 27 –
ஈரோடு மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் (தி.மு.க) தலைமையில் நடந்தது. அப்போது ஆளும் கட்சி திமுக உறுப்பினர்களே மாநகராட்சி மீது குற்றச்சாட்டுகளை கூறி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். கூட்டத்தில் பேசிய திமுக உறுப்பினரும் மண்டல தலைவருமான சசிகுமார் பேசும் போது எங்கள் வார்டுகளுக்கான பணியை செய்ய நாங்கள் யாரிடம் கேட்க வேண்டும் எங்கள் அதிகாரம் என்ன என்று புரியாமல் உள்ளது எந்த நேரத்தில் அதிகாரிகளை அழைத்தாலும் கூட்டம் இருக்கிறது என்று பதில் அளிக்கிறார்கள். இங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை என்று கூறினார்.
அடுத்து திமுக உறுப்பினரும் மண்டல தலைவருமான பி கே பழனிசாமி பேசும் போது ஈரோடு மாநகராட்சியில் தற்போது காலியிட வரி சொத்து வரி உள்பட மொத்தம் பத்து வரிகள் வசூலிக்கப்படுகின்றன. பத்து வரிகள் வசூலிக்கும் மாநகராட்சியில் ஏன் மக்களின் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுக்கவில்லை குப்பை வரியை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதுவும் நீக்கப்படவில்லை என்று பேசினார்.
மேலும் ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் மீது நம்பிக்கை இழப்பதால் கூட்டத்தில் பங்கேற்க கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டவில்லை. கூட்டம் தொடங்கும் போது பெரும்பாலான கவுன்சிலர்கள் வரவில்லை. கூட்டம் தொடங்கி சில நிமிடங்கள் கழித்து தான் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் பிறகு அவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
இதையடுத்து கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர். வழக்கமாக எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தான் கூட்த்தில் இருந்து வெளிநடப்பு செய்வார்கள். ஆனால் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் தி.மு.க.கவுன் சிலர்களே அறிவிக்கப்படாத வெளிநடப்பு போல ஒவ்வொருவராக வெளியேறினர். கூட்டம் முடியும் போது மொத்தம் உள்ள 60 கவுன்சிலர்களில் மேயர் துணை மேயர் தவிர்த்து சுமார் 15 பேர் கவுன்சிலர் மட்டுமே அரங்கில் இருந்தனர்.
இதுகுறித்து கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியின் ஒவ்வொரு கூட்டத்திலும் மக்களின் கோரிக்கைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறோம். ஆனால் அந்த குறைகள் எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை. மேலும் தனிப்பட்ட முறையில் அதிகாரிகள் மட்டுமல்ல, மாநகராட்சி பணியாளர்களிடம் சென்று ஒரு கோரிக்கை வைத்தால் கூட உயர் அதிகாரியிடம் சொல்லுங்கள் என்கிறார்கள். நாங்கள் மக்கள் பிரதிநிதிகள். இங்கு மக்களுக்காகத்தான் நாங்கள் பேசுகிறோம். ஆனால், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களில் மக்களோடு மக்களாக நின்று மனுக்களை கொடுக்கும் அளவுக்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
மாநகராட்சி நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை இழந்து வருகிறோம். இன்னும் 6 மாதத்தில் சட்ட சபை தேர்தல் வருகிறது. மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் எவ்வாறு மக்களை சந்திக்க போகிறோம் என்று தெரியவில்லை. எதை கேட்டாலும் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏதும் செய்ய முடியாது என்ற நிலையில் தான் பெயரளவுக்கு கூட்டத்தில் பங்கேற்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



