ஈரோடு, டிச. 8 –
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் அமைப்பு செயலாளருமான கே ஏ செங்கோட்டையன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் ஒரு மனு கொடுத்து உள்ளார். இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழக தலைவர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் விஜய் வருகிற 16 ந் தேதி ஈரோடு பவளாத்தாம் பாளையத்தில் பிரசாரம் செய்கிறார். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான அனுமதி கேட்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும் கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் விரைவாக வெற்றி கரமாக இதற்கான பணிகள் தொடங்கும். அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் விஜய் பிரசாரம் வெற்றிகரமாக நடக்க ஏற்பாடு செய்யப்படும். தற்போது ரோடு ஷோ தவிர்க்கப்பட்டு உள்ளது.
இப்போது தமிழக மக்கள் மத்தியில் மிகப் பெரிய மாற்றம் உருவாகி கொண்டு வருகிறது. தமிழகத்தில் மக்கள் சக்தி விஜயை அரியணையில் அமர வைப்பது உறுதியாகிவிட்டது. தமிழக வெற்றிக் கழகத்தில் இன்னும் ஏராளமான பேர் சேர் உள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது. பொறுத்து இருந்து பாருங்கள். நான் தமிழக வெற்றிக் கழகத்தில் சேருவதற்கு நிபந்தனை விதித்ததாக கூறுவது தவறு. நான் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் பாலாஜி, கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.



