மார்த்தாண்டம், ஜூன் 25 –
அருமனை அருகே சிதறால் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் தனுஷ் (24). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் தனது நண்பர்களுடன் நண்பர்களுக்கு விருந்து அளிப்பதற்காக அந்த பகுதி கல்லுநாட்டி குளம் என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் நேரம் கழித்த பின்னர் குளத்தில் குளிக்க இறங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக குளத்துக்குள் ஆழமான பகுதிக்கு தனுஷ் சென்று விட்டார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. ஆகவே இது குறித்து அருமனை போலீஸ் நிலையம் மற்றும் குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குளத்தில் மூழ்கி கிடந்த தனுஷின் உடலை மீட்டனர்.
பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்து சில நாட்கள் ஆன நிலையில் குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



