நாகர்கோவில், மே 26 –
ஈத்தாமொழி அருகே வடக்கு சூரங்குடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரமே உள்ளதால், அதற்கான முன்னேற்பாடு பணிகளை தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் தலைமை ஆசிரியர் அறையின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் கிரிஸ்டல் ஜெயன் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தனது அறையில் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பள்ளிக்கு சொந்தமான 16 லேப்டாப் மற்றும் ரூ.5,000 திருட்டு போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருடப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு சுமார் ஒன்றரை இலட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து ஈத்தாமொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


