இரணியல், நவ. 7 –
இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு அடுத்த வர்த்தக நாடார் குடியிருப்பை சேர்ந்தவர் ஜஸ்டின். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி கிரிஸ்டல் மல்லிகா (43). தனியார் நர்சிங் கார்டனில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கிறிஸ்டல் மல்லிகாவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் குடும்ப சொத்து சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிறிஸ்டல் மல்லிகா நேற்று இரவு உறவினர் ஒருவரின் குடும்ப விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அங்கேயே தங்கிவிட்டார். இன்று காலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் சுவர், ஜன்னல் கதவு மற்றும் மின் மீட்டர் எரிந்த நிலையில் இருந்தது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கூறினார். இதுகுறித்து இரணியல் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் அங்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடைய சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு இரணியல் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஒரு லிட்டர் பாட்டிலில் பெட்ரோலை கொண்டு வந்த மர்ம நபர் துணியில் பெட்ரோலை ஊற்றி மீட்டர் பாக்ஸிலும், ஜன்னல் கதவு மற்றும் சுவர்களில் வீசி தீ வைத்து எரித்து இருந்தது தெரிய வந்தது. இதனால் வீட்டின் சுவர் கரிந்து, ஜன்னல் கதவுகள் எரிந்து, மின் மீட்டரும் தீயில் எரிந்து சேதமடைந்த நிலையில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஏற்கனவே இதே வீட்டில் கடந்த மாதம் 10ம் தேதி கதவை உடைத்து 3 பவுன் தங்க செயின், ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பானம் மற்றும் வெண்கலம், சில்வர் உள்ளிட்ட பாத்திரங்கள் திருடப்பட்ட சம்பவம் நடந்திருந்தது. அந்த சம்பவத்திலும் இதுவரை எந்த குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் வீசி வீட்டின் ஜன்னல் கதவு மற்றும் மின் இணைப்பு மீட்டார் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



